மலாக்கா தெங்காவிலுள்ள கடை வளாகம் ஒன்றில், சுருட்டி வைக்கப்பட்ட மெத்தைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7 மணியளவில், தனது கடை வளாகத்தைப் பார்வையிடச் சென்ற அதன் உரிமையாளர், அங்கு கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசில் புகார் அளித்ததாக மாநில போலீஸ் தலைவர் சுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
அக்கடையை பெண் ஒருவர் வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சந்தேகமடைந்த உரிமையாளர், நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, 40 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
முற்றிலும் அழுகிய நிலையில் கிடந்த அச்சடலம் ஆணா, பெண்ணா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.








