பகாங் மாநிலம் பெக்கான்னில், போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி, பெக்கான் மாவட்ட சுகாதார அலுவலகம் அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, 30 வயதுகளில் உள்ள மெக்கானிக், வாகனப் பணிமனை உரிமையாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவர் ஆகியோர் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சைதி மாட் ஜின் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரும் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனைச் செயல்பாட்டில் இடைத்தரகர்களாக செயல்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கட்டணம் செலுத்தி அரசாங்க சுகாதார நிலையத்திலிருந்து போலி மருத்துவச் சான்றிதழ் பெற்றதாக நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








