பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ரஷிய பயணமும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பும், மலேசியாவின் எண்ணெய் மற்றும் டீசல் விநியோகத்தின் தொடர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அமையவுள்ளது.
இன்று தொடங்கும் இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, ஆசியான் தலைவர்கள் மற்றும் ரஷிய அரசாங்கத்திற்கு இடையிலான சந்திப்பில் இது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், மலேசியாவிற்கு எண்ணெய் மற்றும் டீசல் விநியோகம் தங்கு தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வலுவான பொருளாதார நிர்வாகமும், அனைத்துலக நாடுகளுடனான நல்லுறவுகளும், ஆர்.ஓ.என்95 பெட்ரோலின் சில்லறை விலையை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகள் என்ற அளவிலேயே மலேசியா தொடர்ந்து பராமரித்து வர முடிவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றிற்கு இடையிலான போர், மிக விரைவில் தீர்வுக்கு வரக்கூடும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தம்மிடம் தெரிவித்ததாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகலாம் என்றும், போருக்குத் தீர்வு காணப்படலாம் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், அதன் தாக்கம் மலேசியாவையும் பாதிக்கும் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் என்பதால், இந்த ஒப்பந்தமும், தீர்வும் மிகவும் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








