கோத்தா கினபாலு, ஏப்ரல்.19-
மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைப் போட்டியின் போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் அநாகரீகமான காட்சிகள் இடம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை உயர்க்கல்வி அமைச்சு பெற்றுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர், கலை, படைப்பாற்றல் என்ற பெயரில் சமூக உணர்வுகளையும் ஒழுக்க விழுமியங்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகங்கள் தங்களின் வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டின் பல்லின சமூகத்தின் கலாச்சாரத்தையும் நற்பண்புகளையும் கருத்தில் கொண்டு இத்தகைய தவறுகள் களையப்பட வேண்டுமே தவிர, அதற்காகக் கலைத் துறைகளை மூடுவது சரியான தீர்வாகாது என்றும், இருக்கும் விதிமுறைகளைக் கொண்டு இச்சூழ்நிலை சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.








