செப்பாங், சுங்கை பீலெக் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், மானிய விலையிலான 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் இருந்து வணிகப் பயன்பாட்டிற்கான 50 கிலோ சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றிய சட்டவிரோதக் கும்பலைச் சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.
மானிய விலை எரிவாயுவை மாற்றி, அதனைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்குத் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய முயன்றதே இதற்குக் காரணமாகும்.
இரண்டு வாரக் கண்காணிப்பிற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ‘ஒப்ஸ் திரிஸ் 4.0’ சோதனையில், பல்வேறு முத்திரைகளைக் கொண்ட 190 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இணைப்பு குழாய்கள், ஐஸ் கட்டிகள் மற்றும் ஒரு லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மொத்த மதிப்பு 56,000 ரிங்கிட் ஆகும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டு, 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












