தெருநாய்கள் மீது காட்டிய கருணை, பொதுமக்களுக்குப் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. பினாங்கு, பட்டர்வொர்த்தில் உள்ள ஸ்ரீ தஞ்சோங் பகுதியில் நபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்தபடி தெருநாய்களுக்குப் பொது இடங்களில் உணவுகளை வீசிச் சென்றுள்ளார். நாய்கள் உண்ணாமல் எஞ்சிய உணவுகள் அனைத்தும் அழுகி, அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தியதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொதுமக்கள் பலமுறை கூறியும் கேட்காததால், இதுகுறித்து செபராங் பிறை மாநகர் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாநகர் மன்ற அதிகாரிகள் அந்த நபரை நேரில் கண்டுபிடித்து, பொது இடங்களில் இவ்வாறு உணவுகளைக் கொட்டக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விலங்குகளுக்கு உணவளிப்பது நல்ல விஷயம் என்றாலும், அது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பொறுப்புடன் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறினால் சமூகச் சேவை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர் மன்ற உறுப்பினர் தே வீ ஹோங் எச்சரித்துள்ளார்.








