ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில், பாலோ தொகுதியின் புதிய நம்பிக்கையாக ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராகக் களம் காண்கிறார் 'மக்கள் மருத்துவர்' டாக்டர் ரூபன் ஆறுமுகம்.
தனது குடும்பத் தலைமுறையின் முதல் பட்டதாரியான இவர், ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை முடித்ததோடு, மருத்துவ சட்டம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையிலும் சமூகச் சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்து, பன்னாட்டு ரோட்டரி அமைப்பின் உயரிய 'பால் ஹாரிஸ் ஃபெலோ' விருதையும் வென்றவர்.
பாலோ தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், எப்போதும் மூடிக்கிடக்கும் சேவை மையத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து 24 மணி நேர மக்கள் சேவையை உறுதி செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் தோட்டங்கள் மற்றும் புறநகர் மாணவர்களுக்காகப் பள்ளிகளில் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்தி, பாமோல் தமிழ்ப்பள்ளிக்குத் தனிப் புதிய கட்டிடம் அமைக்கப் போவதாக உறுதி அளித்துள்ளார்.
இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் மற்றும் சமூகக் சீர்கேடுகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில் .பாலோ மருத்துவமனையைத் தரம் உயர்த்தி கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி, விபத்துகளைத் தடுக்க சாலை விளக்குகள் மற்றும் முறையான போக்குவரத்து அமைப்பு முறை ஏற்படுத்தப்படும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சுயதொழில் செய்யும் தாய்மார்களுக்கும் தகுந்த வாழ்வாதாரங்களை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாலோ தொகுதியின் மண்ணின் மைந்தனான தம்மை தொகுதி மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம், தொகுதிக்கு நிச்சயம் ஒரு நல்லதொரு மாற்றத்தை தம்மால் ஏற்படுத்த முடியும்" என்று டாக்டர் ரூபன் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








