முற்போக்கான ஊதியக் கொள்கையின் கீழ், நாட்டின் தனியார் துறையைச் சேர்ந்த 4,025 நிறுவனங்கள் தங்களின் 51 ஆயிரத்து 363 உள்ளூர் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் இதனை உறுதிப்படுத்திய அவர், இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையாக இதுவரை 64.07 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மொத்த மற்றும் சில்லறை வணிகம், உற்பத்தி, தொழில்நுட்பச் சேவைகள், கல்வி, உணவு-பானங்கள் ஆகிய துறைகள் இதில் அதிகளவில் பங்கேற்றுள்ளன. இதில் ஊக்கத்தொகை பெற்ற நிறுவனங்களில் 50.2 சதவீதம் சிறு நிறுவனங்கள் என்பதும், பலன் பெற்றவர்களில் 45.9 சதவீதம் பேர் திறன்மிக்க பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, தொழில்முறை பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சராசரி அடிப்படைச் சம்பளம் 12.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசுடன் தொடர்புடைய GLC நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லாத, உள்ளூர் நிறுவனங்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம், மலேசிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் மேலும் விவரித்தார்.








