ஜோகூர், மெர்சிங், கம்போங் பெங்காலான் புக்கிட் அஸ்லி பகுதியில் கார் மோதிய விபத்தில் குட்டி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய கார், 5 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் 31 வயதுடைய ஓட்டுநர் காயமடைந்தார்.
இவ்விபத்தில் தனது கண்கள் முன்பே துடிதுடித்து இறந்த குட்டி யானையின் உடலை விட்டு நகர மனமில்லாமல், அதன் தாய் யானை நீண்ட நேரமாக அந்த இடத்திலேயே சுற்றித் திரிந்து அழுது காவல்காத்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் இந்த உருக்கமான காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளன.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், வனவிலங்கு பாதுகாப்புத் துறையான ‘பெர்ஹிலிதானிடம்’ நிலைமையை ஒப்படைத்தனர். உயிரிழந்த குட்டி யானையின் உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய் யானைக்குக் கண்காணிப்பு காலர் பொருத்தப்பட்டு மீண்டும் பத்திரமாக காட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டது.








