ஜோகூர் மாநிலத் தேர்தலில், மெங்கிபோல் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சூ போ யீ, உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரக் தாக்கம் மற்றும் சமூக நலன் ஆகிய 3 முக்கிய உத்திகளை முன்வைத்து தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
குளுவாங் ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவருமான இவர், தான் வெற்றி பெற்றால் சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு, நகர்ப்புற விவசாயத் திட்டங்கள் மூலம் சமூக விவசாய முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலையாகக் கவனித்துக் கொள்ள ஏதுவாக, தகுந்த குழந்தை பராமரிப்பு மையங்களை அமைப்பதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் போவதாகவும் வழக்கறிஞரான சூ போ யீ உறுதி அளித்துள்ளார். மெங்கிபோல் தொகுதியில் இவருக்கும் பாரிசான் நேஷனல் வேட்பாளர் யாப் சி பெங்கிற்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.








