கடந்த ஆண்டு தேசியத் தினக் கொண்டாட்டத்தின் போது, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு எதிராகக் குற்றத்தனமையிலான பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 42 வயது நூர்ஹஸ்வானி அஃப்னி ஜோர்கி, என்ற பெண்ணின் மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெறக் கோரிய மனுவை அரசுத் தரப்பு நிராகரித்துள்ளது.
இன்று ஈப்போ நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு நிர்வாக விசாரணையின் போது, பிரதிநிதித்துவ மனு நிராகரிக்கப்பட்டதாகவும், வழக்கைத் தொடர்ந்து நடத்தவே தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நஸ்ருல் ஹாதி அப்துல் கனி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி, மாநில அளவிலான தேசியத் தினக் கொண்டாட்ட மேடையில் மாநிலப் பண் இசைக்கப்பட்ட போது, சுல்தானை நோக்கி ஓடிச் சென்று தாக்க முயன்றதாக இப்பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், மனநலப் பரிசோதனையில் அவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால், கடந்த ஆண்டு அவர் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








