புடி மதானி டீசல் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மலேசியர்கள் ஒரு லிட்டர் டீசலை RM2.10 என்ற மானிய விலையில் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம். உலகளவில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும், மலேசிய அரசாங்கம் வழங்கும் இந்த விலை உலகிலேயே மிகக் குறைந்த விலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்று ஜூலை 1 முதல் 8 வரையிலான காலகட்டத்தில் டீசலின் உண்மையான சந்தை விலை ஒரு லிட்டருக்கு RM3.97 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியக் கொள்கையின் மூலம் மீதமுள்ள தொகையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. மக்கள் மைகாட் அடையாள அட்டையைப் பயன்படுத்தி இந்த மானிய டீசலைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியற்ற வெளிநாட்டினரோ அல்லது டீசல் கடத்தலில் ஈடுபடும் சட்டவிரோதக் கும்பலோ அரசு மானியத்தைச் சுரண்டுவது முற்றாகத் தடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், நாட்டின் நிதி நிலையைச் சீரமைக்க இந்த அதிரடி நடவடிக்கை பெரிதும் உதவும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.








