ஷா ஆலம் மற்றும் கிள்ளான் இடையிலான எல்.ஆர்.டி. 3 ரயில் சேவைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அரச அறிக்கையில், 2015-ஆம் ஆண்டில் மக்களின் போக்குவரத்து நெரிசல் துயரைக் களைவதற்காக, தம்மால் முன்வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில், 2018 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங் மற்றும் அவருக்கு ஆலோசராக இருந்த டோனி புவா ஆகியோர் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டத்தின் செலவுகள் குறைக்கப்பட்டு, ஐந்து முக்கிய ரயில் நிலையங்கள் ரத்து செய்யப்பட்டதால் பெரும் தொய்வு ஏற்பட்டது குறித்தும் சுல்தான் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், தற்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்றவுடன், ரத்து செய்யப்பட்ட அந்த ஐந்து நிலையங்களையும் மீண்டும் இணைத்து இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த எல்.ஆர்.டி. 3 ரயில் திட்டத்தின் வெற்றியை எந்தவொரு அரசியல் தரப்பும் தங்களின் தனிப்பட்ட சாதனையாகச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும், இது பல தரப்புகளின் கூட்டு உழைப்பு என்றும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.








