மலக்கா , ஜூலை 04-
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பில் காப்புறுதிப் பணத்தை கோருவதற்காக பொய்யான போலீஸ் புகார் செய்வதற்கு தனக்கு அறிமுகமான நபருக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கறிஞர் நிறுவனத்தின் குமாஸ்தா ஒருவர், மலாக்கா, ஆயர் கேரோஹ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
59 வயது R. செல்வராஜா என்ற அந்த நபர், நீதிபதி எலிசபெல் பய வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
செல்வராஜா, கடந்த 2017 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி, மலக்கா தென்காஹ்-, தாமான் மலக்கா ராய-வில் உள்ள ஜாலான் மலக்கா ராய-வில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைக்கு ஈடாக இரண்டு மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009 குற்றவியல் சட்டத்தின் கீழ் செல்வராஜா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து செல்வராஜா விசாரணை கோரியிருப்பதால் அவரை 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்ததுடன், அவரின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணைப் பிறப்பித்தது.








