அனைத்துலக பார்முலா 1 பந்தயக் கால அட்டவணையில் மீண்டும் நிரந்தர இடத்தைப் பெற வேண்டுமெனில், மலேசியா ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 300 மில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டும் என்று செப்பாங் அனைத்துலக சுற்றுவட்டாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அழான் ஷாஃப்ரிமான் ஹனிஃப் தெரிவித்துள்ளார். உரிமைக் கட்டணம் மற்றும் உள்ளூர் தயாரிப்புச் செலவுகள் அடங்கிய இந்தத் தொகையைச் செலவிடுவதன் மூலம், நாட்டின் சாத்தியமான வருமானம் 1 பில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும் என்றார் அவர்.
பணவசதியும் கால அட்டவணையில் காலியிடமும் இருந்தால் மட்டுமே மலேசியா மீண்டும் பார்முலா 1-ல் இடம்பிடிக்க முடியும் என்றார் அவர். எனினும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் தற்போது முன்னுரிமை அளித்து வருவதால், எதிர்காலத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார்.
வரும் அக்டோபர் 2 முதல் 4 வரை மலேசியாவில் நடைபெறவுள்ள 'கூல்ப் ஏர் பக்ரைன் கிராண்ட் பிரீ' ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பந்தயமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மலேசியா இதற்கு முன்பு 1999 முதல் 2017 வரை செப்பாங்கில் மலேசிய கிராண்ட் பிரீ போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.








