ஆலம் அலி ராண்குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட் (ஏ.ஏ.கே) நிறுவனம், "லார்ஜெஸ்ட் பெல்ட் பிரஸ் சிஸ்டம் டிவாட்டரிங் பிளான்ட்" என்ற சாதனைக்காக மலேசிய சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த அங்கீகாரம் மலேசிய சுற்றுச்சூழல் பொறியியல் துறைக்கும், மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ' பாலன் ஆகாம்பரம் அவர்களின் 30 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவுத் தொலைநோக்கு ஆகியவற்றுக்கான தேசிய அங்கீகாரமாகவும் திகழ்கிறது.

இந்நிகழ்வில், மலேசிய சாதனை புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் வோங், இந்த விருதை டத்தோ' பாலன் ஆகாம்பரம் அவர்களுக்கு வழங்கினார். பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோவ் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ' ஸ்ரீ சுந்தரராஜூ சோமு, பெங்குருசான் அசெட் ஏர் பெஹாட் (பி.ஏ.ஏ.பி) தலைவர் டத்தோ' செரி இர். செசேனி மைடின்சா, தேசிய வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (என்.சி.சி.ஐ.எம்) தலைமையதிகாரி டத்தோ' ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்தத் திட்டம் குடிநீர் சுத்திகரிப்புச் செயல்பாட்டில் உருவாகும் கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த 'எக்கோ கிரீன்' சிமெண்ட் கட்டுமான செங்கற்களாக மாற்றி, பினாங்கின் நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, 'பெனாங் 2030' நோக்கத்தை நடைமுறைப்படுத்தும் சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வதாக முதலமைச்சர் சௌ கொன் இயோவ் பாராட்டினார். மேலும், இத்தகைய நிலையான ‘வாட்டர் ட்ரீட்மென்ட் ரெசிடுவல் மேனேஜ்மென்ட்’ முறையை மலேசியா முழுவதும் உள்ள அனைத்து நீர்வழங்கல் நிறுவனங்களிலும் விரிவுபடுத்த பி.ஏ.ஏ.பி முன்வரும் என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

ஒரு மலேசிய இந்தியரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், தனது நேர்மை, விடாமுயற்சி மற்றும் பொறியியல் திறமையின் மூலம் தேசிய அளவில் பெற்ற இந்த வெற்றி, வருங்கால தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த உத்வேகமாக விளங்குவதுடன், மலேசியாவின் பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும்.









