கடந்த வாரம் 14 வயது இரண்டு பள்ளி மாணவிகள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைவிடப்பட்ட 15 மாடிகளைக் கொண்ட ஈப்போ, சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு மறுமேம்பாடு செய்யப்படவுள்ளது.
பேராக் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைட்டீனா வான் நாசிர் இத்தகவலைத் தெரிவித்தார். இந்த நிலம், வாரியத்திற்குச் சொந்தமானது என்றும், அங்குள்ள இரண்டு பாரம்பரிய கட்டிடங்களைத் தவிர்த்து 15 மாடி கட்டிடம் உட்பட மற்ற பகுதிகள் இடிக்கப்பட்டு புதிய மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஈப்போ மாநகர மன்றத்தின் திட்டமிடல் அனுமதி பெற்ற பிறகே இடிப்புப் பணிகள் தொடங்கும்.
பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாராணி மொகமது முன்னிலையில் பேசிய சைட்டீனா வான் நாசிர், பாதுகாப்பு வேலி அமைத்த பிறகே பணிகள் தொடங்கும் என்றும், அங்குள்ள ஒரு ஆலயத்தின் உரிமைப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் மறுமேம்பாடு முழுமையாகத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
1963-இல் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம், கட்டமைப்புப் பாதுகாப்பு காரணங்களால் 2012 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் காலியாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








