கோலாலம்பூர், செப்டம்பர்.25-
ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான சொத்து விபரங்களை அறிவிக்கத் தவறியதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
41 வயது ஷாரில் அபு பாக்கார் என்ற அந்த உயர் போலீஸ் அதிகாரி, நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் விபச்சாரம், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் துடைத்தொழிப்புப் பிரிவில் பணியாற்றும் அந்த அதிகாரி, தனது சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிக்குள் அறிவிக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனக்குச் சொந்தமான 716.8 கிராம் டிஜிட்டல் தங்கம், 80 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள Crypto நாணயங்கள், 39 ஆயிரத்து 168 ரிங்கிட் முதலீடு, அமானா சஹாம் பூமிபுத்ராவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை வாங்கியது, ஜோகூர் பாருவில் உள்ள ஒரு சொத்துடைமைக்கு 68 ஆயிரம் ரிங்கிட் வீட்டுக் கடனைச் செலுத்தியது முதலியவை குறித்து கடந்த ஜுன் 28 ஆம் தேதி எஸ்பிஆர்எம் விசாரணையின் போது அந்த அதிகாரி விளக்கத் தவறி விட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
துணை சுப்ரிண்டெண்டன் பதவி வகிக்கும் அந்த அதிகாரி, ஷாரிகாட் சஹாரா செர்விசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பிலும் அந்த அதிகாரி விளக்கம் அளிக்கத் தவறிவிட்டார் என்று மற்றொரு குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








