கோலாலம்பூர், டிசம்பர்.03-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ ஒன்றில் நேற்று இரவு வெடிகுண்டு புரளியினால் விமானப் போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது.
குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய விமானங்கள், வெடிகுண்டு புரளியால் மிகக் காலத் தாமதமாகப் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக முகப்பிடங்களும், விமானப் புறப்பாடு நுழைவாயில்களும் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதால் பயணிகளும் பெரும் தடுமாற்றத்திற்கு ஆளாகினர்.
வெடிகுண்டு புரளியைக் கிளப்பியதாகக் கூறப்படும் குறும்புக்கார பயணி ஒருவர், பின்னர் வளைத்துப் பிடிக்கப்பட்டது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கேஎல்ஐஏ நிர்வாகம் தெரிவித்தது.
கேஎல்ஐஏ டெர்மினல் 1, நேற்று மாலை 5.32 மணிக்கு வெடிகுண்டு தொடர்பில் தகவல் பெற்றது. இதனைத் தொடர்ந்து விமானப் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் போலீஸ் பிரிவிடம் தகவல் அளிக்கப்பட்டு, தேவையான பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க ஆவனம் செய்யப்பட்டதாக மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தெரிவித்தது.
எல்லா இடங்களிலும் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்ட நிலையில் இரவு 8.58 மணிக்கு, வெடிகுண்டு தொடர்பாக வந்த தகவல் புரளி என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
அதுவரையில் பயணிகள் அனைவரின் பாதுகாப்பும் உறுதிச் செய்யப்பட்டது என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தெரிவித்தது.
பயணி ஒருவர், தனது பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக எழுதி வைத்திருந்தது, பின்னர் தகவலாக மாறி, வெடிகுண்டு புரளியாக மாறியது என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.








