புத்ராஜெயா, மார்ச்.10-
நாட்டில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ள மூன்று அண்மையச் சம்பவங்களை தேசிய ஒற்றுமை அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது. அதே வேளை அதற்குப் பொறுப்பானவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக, நடப்பிலுள்ள சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியா போன்ற பல இன மற்றும் பல மதங்கள் கொண்ட நாட்டில் இன மற்றும் மத உணர்வுகளைத் தொடும் எந்தவொரு வன்முறை, மத தூண்டுதல், வெறுப்பு அல்லது தீவிரவாத செயல்களும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று அவர் கூறினார்.
சமூக ஆர்வலர் Cikgu சந்திராவின் வாகனம் எரிக்கப்பட்டதையும், புனிதமான இந்து சின்னமான திரிசூலத்தை ஒரு நபர் மிதித்துச் சேதப்படுத்துவதைக் காட்டும் வைரலான வீடியோவையும், சுயேட்சை சமய போதகர் ஜம்ரி வினோத் மீதான தாக்குதலையும் ஆரோன் சுட்டிக் காட்டினார்.
மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல், சமூகத்தின் அனைத்து அடுக்குகளாலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டியவை என்ற அடிப்படையில் மலேசியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.








