சுங்கை பூலோ, மார்ச்.10-
வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், Lindung Kerjaya MyFutureJobs Wira திட்டத்தின் மூலம் சுமார் 5,000 முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டமானது இவ்வாண்டில் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 2,500-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும், குறைந்தபட்சமாக 45 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கும் இலக்கை அடைவதே நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், மனித வள அமைச்சின் நோக்கமானது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாது, முன்னாள் ராணுவ வீரர்களின் திறன்கள் மற்றும் ஒழுக்கத்திற்கு ஏற்ப, அவர்களுக்குரிய மரியாதையான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை உறுதிச் செய்வதாகும் என்றும் ரமணன் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அவர்களை பணியில் அமர்த்துவதன் மூலம் தொழில் துறைகள் திறமையான மற்றும் கட்டுப்பாடான பணியாளர்களைப் பெறுகின்றன.
இதனால், வெளிநாட்டு தொழிலாளர்களை மீதான சார்பை குறைக்கும் ஓர் உத்தியாக இது அமைவதையும் ரமணன் சுட்டிக் காட்டியுள்ளார்.








