ஷா ஆலாம், மார்ச்.10-
நாட்டில் இனம் மற்றும் சமயம் சார்ந்த விவகாரங்களில், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது, ஒரு சமூகப் பிரச்சினை என்பது மட்டுமல்லாமல், பலவீனமான, தீர்மானமற்ற நிர்வாகத்தின் அப்பட்டமான அறிகுறிகள் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் விமர்சித்துள்ளார்.
உள்துறை அமைச்சும், மலேசிய போலீஸ் படையும், இனி வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்து விடாமல், நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக அமைதியை பாதுகாக்கத் தேவையான கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புனித நூல்களை அவமதிப்பது, தெய்வங்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களை சிலர் தைரியமாக மேற்கொள்ளும் ஆபத்தான போக்கு தற்போது உருவாகி வருவதை நாம் காண்கிறோம்.
ஆனால், இதைவிட மிக கவலைக்கிடமான நிலை என்னவென்றால், இத்தகைய சம்பவங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பதையும் பிரகாஷ் சம்புநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் ஐஜிபி முஹமட் காலிட் இஸ்மாயில் ஆகியோர் வெறும் எச்சரிக்கைகள் மட்டும் வழங்குவதை விட, செயலில் ஈடுபட வேண்டும் என்றும் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.








