புக்கிட் மெர்தாஜாம், மார்ச்.10-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸம்ரி வினோத்திடம் பினாங்கு மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிக் டாக் நேரலை ஒன்றில், மிரட்டல், தூண்டுதல், அவமதிப்பு மற்றும் இன பாகுபாட்டைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவரிடம் இவ்விசாரணையானது மேற்கொள்ளப்படுகின்றது.
அக்காணொளி தொடர்பாக கடந்த மார்ச் 8-ஆம் தேதி போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இந்த விசாரணையானது தொடங்கப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஸம்ரி வினோத் மீது தேச நிந்தனை, அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு அவமதிப்பு செய்தல் மற்றும் இணையத்தளத்தில் தவறான முறையில் இழிவாகப் பேசுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அதே வேளையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், உணர்வுகளைத் தூண்டும் உள்ளடக்கங்கள் அல்லது இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தக்கூடிய ஊகங்கள் போன்றவற்றை பொதுமக்கள் யாரும் வெளியிடவோ பரப்பவோ கூடாது என்றும் அஸிஸி இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கடந்த மார்ச் 7-ஆம் தேதி, புக்கிட் மெர்தாஜாமில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தனது வாகனம் சேதமடைந்ததாகவும் ஸம்ரி வினோத் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இன்று அதிகாலை போலீசில் சரணடைந்த நான்கு பேர், இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.








