புத்ராஜெயா, மார்ச்.10-
நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான தூண்டுதல்களை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பான விவகாரம் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், சில தரப்பினரால் திட்டமிட்டுத் தூண்டப்படும் இனவாதப் போக்குகள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இத்தகையச் செயல்களில் ஈடுபட்ட நபர்களைப் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே வேளையில், போலீசார் விசாரணை நடத்துவதற்கும், Attorney general அலுவலகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பது மலேசிய மக்கள் அனைவருமே அறிவர் என்று குறிப்பிட்டுள்ள ரமணன், பெயரைக் குறிப்பிட்டு மேலும் அவர்களுக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.








