எஸ்பிஎம் தேர்வில் 11A பெற்ற மாணவர் ஒருவருக்கு மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் கிடைக்கவில்லை என முன்பு தாம் வெளியிட்ட செய்திகளுக்கு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிகாரப்பூர்வ திருத்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த மாணவருக்கு ஏற்கனவே மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க, இது தொடர்பாக முன்பு தாம் வெளியிட்ட ஊடக அறிக்கைகள் அனைத்தும் மீட்டுக் கொள்ளப்படுவதாக பிரகாஷ் கூறினார்.
மேலும், தகுதியான மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் பிரதமர், கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் பிரதிநிதியாக, கல்வி சமத்துவத்திற்காகவும் வெளிப்படைத்தன்மைக்காகவும் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








