பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.28-
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள ஆயுத மோதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண உடனடியாக ராஜதந்திரப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போர்ச் சூழல் தீவிரமடைவது உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்த மோதலால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்கள், குறிப்பாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறித்து சுட்டிக் காட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இக்கட்டான இந்தச் சூழலில் மலேசியா எப்போதும் சர்வதேச சட்டங்கள் மற்றும் அமைதி வழியிலான தீர்வுகளையே ஆதரிக்கும் எனத் தெரிவித்தார். மேலும், இந்தப் பதற்றத்தைக் குறைக்க அனைத்துலக நாடுகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.








