நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுங்கை உஜோங் குறுநிலத் தலைவரான உண்டாங் டத்தோ முபாரக் தோஹாக் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலத்தின் 'நீதி மற்றும் சட்ட மன்றம்' அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தின் யாங் டி-பெர்துவான் பெசார் தலைமையில் இன்று ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புக்கூட்ட அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.
முபாரக் தோஹாக் நீக்கப்பட்டதற்கான 33 காரணங்கள் இந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டன.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 'ஆடாட் பெர்பாத்தே' பாரம்பரிய முறைப்படி, மாநில அரசரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட நான்கு முக்கிய குறுநிலத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1993-ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவியில் இருந்த இவர், தற்போது மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டுள்ளார்.








