பணியிடங்களில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகும் ஆசிரியர்களுக்கு உதவ, கல்வி அமைச்சு உடனடியாக ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்யுடிபி தலைவர் அமினுடின் அவாங் வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர் கெப்போங்கில் உள்ள ஒரு பள்ளியில், 17 ஆண்டுகள் பணியாற்றி 3 முறை சிறந்த சேவை விருது பெற்ற DG44 தர பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளி தலைமையாசிரியரின் அடக்குமுறையால் தனது DG48 பதவி உயர்வை இழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், அதே தலைமையாசிரியரின் கீழ் ஐந்து ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய என்யுடிபி தலைவர் அமினுடின் அவாங், இந்தப் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கல்வி அமைச்சு விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது வெறும் புகார் பெறும் தளமாக இல்லாமல், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான தீர்வு தரும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.








