புத்ராஜெயா, ஜூலை.12-
FRIM ( பிரிம் ) எனப்படும் மலேசிய வன ஆய்வுக் கழகத்திற்குச் சொந்தமான சிலாங்கூர் வனப் பூங்க, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ தலைமையகம் வீற்றிருக்கும் பாரிஸில் ஜுலை 6 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழுவினர் , தங்களின் 47 ஆவது கூட்டத்தை நடத்தி வரும் வேளையில் மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சிடம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் வனப்பூங்காவை யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கும்படி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பரிந்துரை முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் 21 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அக்குழுவினர், அந்த வனப் பூங்காவிற்கு உலகப் பாரம்பரியத் தளத்திற்கானஅங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
FRIM- மின் சிலாங்கூர் வனப் பூங்கா தனித்துவம் வாய்ந்ததாகும். சுரங்கப் பகுதியில் வீற்றிருந்த நிலையில் மரங்களை அதிகளவில் நடவு செய்யப்பட்டது மூலம் வெப்ப மண்டல வன சூற்றுச்சூழல் பகுதியாக அது திகழ்கிறது.
பல்லுயிர் பெருக்கம், மழைக் காடுகள், பல் வகையான மரங்கள் என இந்த வனப் பூங்கா பன்முகத்தன்மைக் கொண்டுள்ளது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1926 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட FRIM, கோலாலம்பூருக்கும், சிலாங்கூருக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான கெப்போங்கில் 545 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வெப்ப மண்டல வனப் பூங்காவைப் பராமரித்து வருகிறது.








