Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.05-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே ஆகிய இருவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று, மேலும் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையில், வீட்டு வாடகைச் செலவுகளுக்காக ஆல்பெர்ட் தேவிடமிருந்து 64 ஆயிரத்து 924 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக ஷாம்சுல் இஸ்கண்டார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 17(a) இன் கீழ் ஷாம்சுலுக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு, ஆல்பெர்ட் தே மீது அதே சட்டப் பிரிவு 17(b) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நாசீர் நோர்டின் முன்னிலையில், குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், 49 வயதான ஷாம்சுல் மற்றும் 37 வயதான ஆல்பெர்ட் தே ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

சபாவில் ஆல்பெர்ட் தேவிற்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு கனிம சுரங்க உரிமங்களுக்கான ஒப்புதலைப் பெற்றுத் தர ஷாம்சுல் இஸ்கண்டார், லஞ்ச ஊழல் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று முதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News