பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.05-
கெடா மாநில அரசுக்குச் சொந்தமான கால்நடை வளர்ப்புக் கூட்டுத் திட்டத்தில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள் நேற்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கால்நடைத் தீவனத் திட்டத்திற்கான நில பயன்பாட்டு உரிமைகளைப் பெற்றுத் தர அந்த நாடாளுமன்ற உறுப்பினர், 4 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இப்புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய அதிகாரிகள் இதுவரை 15 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை எஸ்பிஆர்எம் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.








