சபா மாநிலம், சுங்கை பினாங்கா வனக்காப்பகப் பகுதியில், தந்தத்திற்காக போர்னியோ யானை ஒன்று கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்திற்கு, இயற்கைக்கான உலகளாவிய நிதிய அமைப்பான டபிள்யூ.டபிள்யூ.எஃப் மலேசியா மிகவும் கவலை தெரிவித்துள்ளது.
இச்சம்பவமானது மாநிலத்தில் வனவிலங்குகள் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை தெளிவாகக் காட்டுவதாக அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளையில், யானை கொல்லப்பட்ட சம்பவத்தை, ‘திட்டமிட்ட குற்றச் செயல்’ என அதன் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயலதிகாரியுமான சோபியா லிம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, வனக் காப்பகப் பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 17-ஆம் தேதி, அந்த போர்னியோ யானையானது, கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தலை “L” வடிவில் வெட்டப்பட்டிருந்ததுடன், தந்தங்களும் அகற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








