வருகின்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியானது, அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
தமது கட்சியானது, ஜோகூரில் போட்டியிட ஏற்ற தொகுதிகளை தற்போது அடையாளம் கண்டு வருவதாக முன்னாள் திராம் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் தேசிய சமூகக் கொள்கை மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவருமான எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தங்களின் நோக்கம் ஜோகூரில் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் கவனம் செலுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், வேட்பாளர் தேர்வானது, கட்சித் தலைமையால் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிகேஆர் தலைவர்களான டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ராம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமத் ஆகிய இருவரும், பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரின் தலைமையிலான, பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியானது, பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தலைவர்களை மாநில அரசியலுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.








