கோலாலம்பூர், புக்கிட் ஜலில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக 34 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே 18-ஆம் தேதி, காலை 11.30 மணியளவில், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காரின் கதவைத் திறந்து, அவரது கைப்பேசி மற்றும் கைப்பையைப் பறிக்க முயன்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது, அப்பெண் உதவி கேட்டு அலறியதையடுத்து, சந்தேக நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அப்பெண்ணிடமிருந்து போலீஸ் புகார் பெற்றதையடுத்து, கடந்த மே 20-ஆம் தேதி, மாலை 5.36 மணியளவில், பிரிஃக்பீல்ட்ஸ் பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் முகமது ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.








