பெண்களின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும், பள்ளி மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை அரசாங்கம் இவ்வாண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.
பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் முன்பே, மாணவிகளுக்கு தொழில்முறை மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய திறன்களை கற்பிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பெண்கள், எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையும் நிலை உருவாகும் என இன்று பங்சாரில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான ரோட்டரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் நான்சி சுக்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெரியவர்களாக உருவெடுப்பதற்கு முன், அவர்கள் சிறுமிகளாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் திறன் பயிற்சித் திட்டங்களைக் கற்பதால், எதிர்காலத்தில் சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
இத்திட்டமானது நாடு முழுவதும், மாவட்ட கல்வி அலுவலகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக முக்கியத் தேர்வுகள் முடிந்த பின் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாணவிகளுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல், வாழ்க்கைத் திறன்களிலும் முன்னேறி எதிர்காலத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நான்சி சுக்ரி வலியுறுத்தியுள்ளார்.








