நாடெங்கிலும் சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்து, அரசாங்க அமைப்புகளும், நிதி நிறுவனங்களும் நேரடியாக மக்களிடம் சென்று விளக்கமளிக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சிறு தொழில் செய்வோர், அரசாங்கம் மூலமாகத் தங்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் குறித்து தெளிவாக அறிந்து பயனடைய வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் நேரடியாகக் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தாமான் மெலாவாத்தி உழவர் சந்தையை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் அன்வார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கசானா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிதி வசதிகளும், கடன் உதவிகளும் பரவலாக கிடைத்தாலும் கூட, பலர் அவற்றைப் பற்றி இன்னும் அறியாமல் இருப்பதுடன், முழுமையாக பயன்படுத்தவும் தவறி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், வியாபாரிகளை அலுவலகத்திற்கு வரவழைப்பதை விட, அதிகாரிகளே நேரடியாகச் சென்று அவர்களுக்குத் தேவையான கடனுதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பேங்க் சிம்பானான் நேஷனல், தெக்குன் நேஷனல், பேங்க் ராக்யாட், அமானா இக்தியார் மலேசியா, மஜ்லிஸ் அமானா ராக்யாட் மற்றும் அக்ரோபேங்க் ஆகிய நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 400 ரிங்கிட் அளவிலான குறைந்த சேவைக்கட்டணத்துடன், அதிகமானோர் கடன்களைப் பெறும் வகையில் மக்களை ஈடுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.








