வர்த்தகப் பகுதிகளில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதைத் தடுக்கும் புதிய திட்டமிடல் வழிகாட்டுதல்களைப் பாதுகாக்கும் வகையில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இந்த வழிகாட்டுதல்களானது, வர்த்தகப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடமிருந்து, ஊராட்சி மன்றங்களுக்குக் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், உருவாக்கப்பட்டவை என சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிமுறைகளானது, சீரான போக்குவரத்து இயக்கங்களுக்காகவும், வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும், அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வர்த்தகப் பகுதிகளில் இடவசதி குறைவாக இருப்பதால், சமய சமூகங்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த விதிகளானது புதிய கட்டுமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வர்த்தகப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களைப் பாதிக்காது என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட, 'சமூக மேம்பாட்டிற்கான சிலாங்கூர் மாநிலத் திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள்' குறித்து பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் கவலைகள் எழுப்பியதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.








