சிரம்பான்,ஜன.4
துபாய் நகர்வு போன்ற அரசாங்கத்தை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், நடவடிக்கையும் பொறுப்பற்ற செயலாகும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைக் காட்டிலும் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் அல்லது கட்சி அளவிலான பொறுப்பாளர்கள், தாங்கள் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்ப தங்களின் முழு கவனமும், தங்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் மீது இருக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை மாற்றுவதில் அல்ல என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினருக்கு தற்போது வேறு வேலை கிடையாது. அதேவேளையில் அரசாங்கத்தை கவிழ்ப்பது திண்ணம் என்று அறிவித்து இருக்கும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், ஒரு மாநிலத்தின் மந்திரி பெசார் என்ற முறையில் தமது முழு கவனமும் கெடா மாநிலத்தையும், நாட்டையும் மேம்படுத்துவதில் இருக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் அல்ல என்று அந்தோணி லோக் விளக்கினார்.








