கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-
போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி உட்பட போலீஸ் படையில் சில முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடம் மாற்றப்படுவதாக வெளியான செய்தி தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் படையில் மிகப்பெரிய சீரமைப்பு நடைபெறவிருப்பதைப் போன்று தவறான செய்தியை தந்துள்ளதாக கூறப்படும் இணைய செய்தித் தளம் குறித்து விசாரணை நடத்துவதற்கு போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
போலீஸ் படையில் மாற்றம் நடைபெறவிருப்பதாக அந்த இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்தியை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் இன்று காலையில் வன்மையாக மறுத்துள்ளார்.
அந்த இணைய செய்தித் தளத்தின் செய்தியின்படி போலீஸ் படைத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான், மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியான மரிட்டிம் மலேசியா- வின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படவிருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தது.
அவேளையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநராக பதவி வகித்து வரும் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி , தேசிய போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்படவிருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
போலீஸ் படை, எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிக்கையையும் வெளியிடாத நிலையில் இந்த செய்தியை யார் வழங்கியது என்பது குறித்து அந்த இணைய செய்தித்தளம் அம்பலப்படுத்த மறுத்து விட்டதைத்தொடர்ந்து இது குறித்து புலன் விசாரணை செய்வதற்கு போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.








