கோலாலம்பூர், செந்துல் பகுதியில் உள்ள கம்போங் சுபாதாக் தம்பகான் கிராமத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் 119 குடியிருப்புகள் எவ்வித இடையூறுமின்றி முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
சட்ட அமலாக்க அமைப்புகளின் கூட்டுப் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட 'ஓப் ரோபோ' இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முதற்கட்ட வேட்டையில் இதே பகுதியில் 69 வீடுகள் இடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஞ்சியிருந்த 119 வீடுகளும் மதியம் 2 மணிக்குள் முற்றிலும் இடிக்கப்பட்டு தரைமாட்டப்பட்டதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பாஸ்ரி சகொனி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதியே நீதிமன்ற வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு, காலி செய்ய இறுதி அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. எவ்வித தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தலையீடோ அல்லது பொதுமக்களின் எதிர்ப்போ இன்றி, பாதுகாப்புப் படையினரின் முழுமையானக் கண்காணிப்பில் இந்த இடிப்பு நடவடிக்கை எவ்வித இடையூறுமின்றி மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது பாஸ்ரி சகொனி மேலும் தெரிவித்தார்.








