பினாங்கின் கனவுத் திட்டமான 'முத்தியாரா லைன்' எல்ஆர்டி திட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை அடுத்து, ஜார்ஜ்டவுனில் உள்ள முக்கியச் சாலையான ஜாலான் மாகாசின் வரும் ஆகஸ்ட் 7 முதல் 10-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை, கப்ரி ஹோட்டல் முதல் தி மெகசின் ஹோட்டல் வரையிலான மூன்று பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டு, பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் நிலத்தடி குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. எனினும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இடதுபுறமுள்ள ஒரு பாதை மட்டும் தொடர்ந்து திறந்திருக்கும்.
வாகனமோட்டிகள் ஜாலான் மாக்சுவெல், லெபோ தெக் சூன் மற்றும் லெபோ மெக்நாயர் வழியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு எல்ஆர்டி திட்ட வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. பினாங்கின் போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இத்திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








