கோலாலம்பூர், பிப்ரவரி.11-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் தனக்கு 17.7 மில்லியன் பங்குகள் இருப்பதாக வெளியான செய்தி தொடர்பாக, புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அந்தச் செய்தி உள்நோக்கம் கொண்டது என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸாம் பாக்கி, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தற்போது சந்தையில் தனக்கு எந்தப் பங்குகளும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதியே தாங்கள் புளூம்பெர்க்கிற்கு விளக்கம் அளித்து விட்டதாகவும், ஆனால், அவர்கள் ஏன் அதைச் செய்தியில் குறிப்பிடவில்லை? என்று கேள்வி எழுப்பிய அவர், அஸாம் பாக்கி, எஸ்பிஆர்எம் அமைப்பின் நற்பெயரைக் கெடுத்ததற்காக நாளை அந்த நிறுவனத்திற்குச் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.








