கோலா லங்காட், ஜூன்.28-
சிலாங்கூர் மாநிலம் பந்திங் பகுதியில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததாக நம்பப்படும் 29 வயதுடைய நபரைத் தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தீயணைப்புத் துறையின் கே-9 (K9) பிரிவு உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதுவரை அந்நபர் குறித்த எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து நேற்று காலை 10.33 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாலத்தின் மீது நிறுத்தப்பட்டிருந்த நீல நிற பெரோடுவா மைவி கார், காணாமல் போன 29 வயது நபருக்குச் சொந்தமானது என நம்பப்படுவதாகவும், அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் கருதுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.








