முக்கா, ஜூன்.28-
சரவாக் மாநிலம் முக்கா பகுதியில் உள்ள ஜாலான் பாயான் உலு அருகேயுள்ள செம்பனைத் தோட்டத்தின் திறந்தவெளி பகுதியில் சட்டவிரோதச் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக, நான்கு உள்ளூர் ஆடவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து முக்கா மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரிஸால் அலியாஸ் கூறுகையில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் திடீர் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தச் சோதனையின் போது, சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 சேவல்கள் மற்றும் சில சூதாட்டப் பொருட்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








