மூவார், ஜூன்.28-
ஜோகூர் மாநிலம், மூவார் பகுதியில், தங்களை விட வயது குறைந்த மாணவர் ஒருவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததுடன், பள்ளியை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளியதாக, 17 வயதுடைய ஆறு மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் தொடர்பாக நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் போலீசில் புகார் பெறப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகாரின் படி, 14 வயதுடைய அம்மாணவர், மூத்த மாணவர்களால் தாக்கப்பட்டதுடன், அவர்களிடம் பணத்தையும் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மாணவர் மார்பில் குத்தப்பட்டதுடன், தலையால் மோதப்பட்டதால் கண் பகுதியில் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட 6 மாணவர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.








