கிள்ளான், ஜூன்.28-
இன்று புதிதாக துவங்கப்பட்ட ஷா ஆலாம் எல்ஆர்டி3 ரயில் சேவை மற்றும் அதனுடன் கூடிய இணைப்புப் பேருந்துகளில், வரும் ஜூலை 31-ஆம் தேதி வரையில், பொதுமக்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஷா ஆலாமில் உள்ள ஜோஹான் செத்தியா எல்ஆர்டி பணிமனையில் இன்று எல்ஆர்டி3 சேவையைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துவதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுடன், பயண நேரமும் எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இலவச பயணச் சலுகை வழங்கப்படுவதாகவும் பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.








