ஒற்றுமையை வலுப்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை முன்னிறுத்தி துவேஷ தன்மையிலான குரல்களுக்கு அடிபணியாமல் இருக்கவும் மலேசியர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தன் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா விடுத்துள்ள அறைகூவல், மிக பொருத்தமானதாகும் என்று மலேசிய இந்தியர் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவின் சிறப்புபணிக்குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
பல்லினத்தவர்களின் பின்னணியை கொண்டிருப்பதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும், அதன் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியிருப்பது, சாலச்சிறந்த கருத்தாகும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களின் பன்முகத்தன்மையை மாற்றுவதற்கு சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிக்கு சிலாங்கூர் சுல்தான் விடுத்துள்ள இந்த வேண்டுகோள், சிறந்த பதிலாகும், நம்பிக்கையை விதைக்கிறது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
நாடு சுதத்திரம் பெற்றது முதல் கட்டிக்காக்கப்பட்டு வரும் பலதரப்பட்ட கலாச்சாரங்களை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சுல்தான் வலியுறுத்தியிருப்பதையும் டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான விவகாரங்களை வேண்டுமென்றே எழுப்பி, அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்கும் சுயநலம் சார்ந்த அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சுல்தான் அறிவுறுத்தியிருப்பது, மிக பொருத்தமான, ஏற்புடைய கருத்தாகும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.








