திரெங்கானுவில் நடைபெறவுள்ள ‘ஆர்.எக்ஸ்.இசட்' உறுப்பினர்கள் 8.0’ மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்பதற்காகச் சென்ற நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டிகள், பகாங், கம்பாங் ஓய்வெடுக்கும் பகுதியான ஆர் & ஆர்னில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட கடுமையான நெரிசல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று த்ரெட்ஸ் தளத்தில் வெளியாகி, குறுகிய நேரத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. காரோட்டிகளுக்குப் பெரும் இடையூறாக இருந்த இத்தகைய நிகழ்வுகளைத் தடை செய்ய வேண்டும் என ஒரு தரப்பு நெட்டிசன்கள் கொந்தளித்து வரும் வேளையில், மோட்டார் சைக்கிள்களுக்கு எனத் தனி எரிபொருள் நிரப்பும் பாதையை பெட்ரோல் நிலைய நிர்வாகம் அமைத்திருக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு ஆதரவாகப் பேசும் மறுதரப்பினர், "இவர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கை மீறும் 'மேட் ரெம்பிட்' சாலை ரவுடிகள் அல்லர்; இவர்களில் பலர் நல்ல வேலைகளில் இருக்கும் குடும்பஸ்தர்கள் மற்றும் முதியவர்கள். தங்களின் பொதுவான பொழுதுபோக்கிற்காகவே இங்கு கூடினர்" என வாதாடுகின்றனர்.
மேலும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளோட்டிகள், கார்களுக்கு வழிவிட்டு இன்முகத்தோடு பொதுமக்களுக்கு உதவினர் என்றும் நேரில் பார்த்த சிலர் பதிவிட்டுள்ளனர்.








