கிள்ளானில் 'ராக்கி' என்ற வளர்ப்பு நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷித் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விரைவான, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"ஒரு மலாய் முஸ்லிமாக, ராக்கியின் இந்த கொடூரக் கொலையை நான் தயக்கமின்றி எதிர்க்கிறேன். இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது இரக்கத்தையும் நீதியையும் மட்டுமே போதிக்கிறது" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 29 ஆம் தேதி போர்ட் கிள்ளான் பகுதியில் கிள்ளான் மாநகர் மன்ற அதிகாரிகள் மேற்கொண்ட நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது இந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
அந்த நாய்க்கு உரிமம் இல்லை என்பதைக் காரணம் காட்டி இந்த வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய சியர்லீனா அப்துல் ரஷித், சட்டத்தை எவரும் கையில் எடுக்கக் கூடாது என்றும், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.








