முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தைக் குறைத்த கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று வலுவாக வாதிட்டுள்ளது.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , யோ யாங் போ, "மன்னிப்பு வாரியம் பொதுமக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும், நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்படக் கூடாது" என்றார். நஜிப்பின் 12 ஆண்டுச் சிறையை 6 ஆண்டுகளாகவும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியனாகவும் குறைத்த மன்னிப்பு வாரியத்தின் முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வழக்கறிஞர் ஸைனுர் சக்காரியா, 1994-ஆம் ஆண்டு அரசியல் சாசனத் திருத்தத்திற்குப் பிறகு, மன்னிப்பு வழங்குவதில் மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரம் நீக்கப்பட்டு, அவர் வாரியத்தின் ஆலோசனையின் படியே செயல்பட வேண்டும் என வாதிட்டார்.
இருப்பினும், மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாமன்னரின் சிறப்புரிமை என்பதால் அதை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா எதிர்த்து வாதிட்டனர் வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதன் தீர்ப்பைத் ஒத்திவைத்தது.








